தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த 22 துணை நடிகர்-நடிகைகள் நீக்கப்படுகிறார்கள். அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு செய்யப்படுகிறது.
சென்னையில் உள்ள நடிகர் சங்கம் எதிரில் துணை நடிகர்-நடிகைகள் சிலர் முற்றுகை போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் சங்க நிர்வாகிகள் மீது அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுளையும் கூறினார்கள்.
இதுபோல் நடிகர் சங்க உறுப்பினரான வாராகி என்பவர் நடிகர் சங்க கட்டிட நிதி வசூலுக்காக நடத்தப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறினார். இதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர்.
உறுப்பினர்கள் நலனுக்காக பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் தங்கள் மீது சிலரது தூண்டுதலால் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது செயற்குழுவை கூட்டி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சங்க தலைவர் நாசர் பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று சங்க அலுவலகம் முன்னால் திரண்டு மிரட்டல் விடுத்த 22 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தார். நடிகர் சங்கத்தின் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் செயற்குழுவை கூட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்க நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். அதிருப்தி கோஷ்டியின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தியவர்கள் உள்பட 22 பேரை சங்கத்தில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த 22 பேருக்கும் முதல் கட்டமாக, ‘சங்கத்தில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது?’ என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதுபற்றிய தீர்மானத்தை செயற்குழுவில் நிறைவேற்றி உடனடியாக நோட்டீசை அனுப்புகின்றனர். இதற்காக வருகிற 10ஆம் திகதி சென்னையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.