திருச்சி கே.கே.நகர், ராணி அண்ணாத்துரை தெருவைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 50). இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் கோலாகலம் என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கினார்.
இதில் இவரது மகன் மலையமான் (25) கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் மலையமானுக்கும், திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த அமுதாவின் மகள் தீபா என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.
இதற்கு மலையமானின் தந்தை சுரேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். அமுதாவிற்கு மலையமானை விட 10 வயது அதிகம் என்பதாலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதாலும் எதிர்ப்பு ஏற்பட்டது.
ஆனாலும் மலையமான் எதிர்ப்பை மீறி தனது காதலி அமுதாவை கைப்பிடிக்க முடிவு செய்தார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் திருமண நிச்சயம் செய்து பத்திரிக்கையும் அச்சடித்தார்.
மகன் மலையமானின் திருமண பத்திரிக்கையை பார்த்த தந்தை சுரேந்திரன் அதிர்ச்சியடைந்தார். தனது மகனை கடத்தி கட்டாய திருமணம் செய்து வைக்க பெண் வீட்டார் முயற்சிக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டுமென கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடிகர் மலையமானையும், தீபாவையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இருவரும் விருப்பத்தின் பேரில் திருமணம் செய்ய உள்ளதாக கூறி விட்டனர். இதனால் போலீசாரால் திருமணத்தை தடுக்க முடியவில்லை.
இதற்கிடையே நிச்சயிக்கப்பட்டபடி நேற்று (19ம் தேதி) மலையமான், தீபா திருமணம் நடத்த ஏற்பாடு தடபுடலாக நடந்தது. மீண்டும் எப்படியாவது திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் சுரேந்திரன் புகார் செய்தார்.
ஆனால் ஏற்கனவே இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரித்து இருவர் விருப்பத்துடனும் இந்த திருமணம் நடப்பது தெரிய வந்ததாலும், இருவரும் மேஜர் என்பதாலும் போலீசாரால் திருமணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.
இதைத்தொடர்ந்து நேற்று நடிகர் மலையமான் தனது காதலி தீபாவை திட்டமிட்டப்படி திருமணம் செய்தார். கடந்த 10 நாட்களாக நடிகர் மலையமானின் திருமணம் நடக்குமா? என்று பரபரப்பாக இருந்த சூழ்நிலையில் நேற்று திருமணம் நடந்தது.
இது குறித்து தந்தை சுரேந்திரன் கூறியதாவது:-
எனது மகன் கோலாகலம் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த நிலையில் அவருடன் 10 வயது மூத்த பெண்ணான தீபாவை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு நான் சம்மதிக்க வில்லை. இந்நிலையில் என் மகனை கடத்தி வீட்டு சிறையில் வைத்து திருமணம் நடத்தி உள்ளனர். எனது மகன் மாய வலையில் விழுந்து விட்டான். விபரம் தெரிந்த பிறகு என்னிடம் மீண்டும் வருவான்.
இவ்வாறு அவர் கூறினார்.