திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான பிரபுதேவா தனது கண்களை தானம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் தேசிய கண் தான வாரம் நடைபெற்றது. இதில் கண் தானத்திற்கான பரப்புரையை திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான பிரபுதேவா தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, பார்வை இழப்பை தடுக்க அனைவரும் கண் தானம் செய்ய வேண்டும். கண் தானம் செய்வது ஒரு நல்ல விஷயம். இதன் பயன்கள் பற்றி மருத்துவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
இதனால் அனைவரும் கண் தானம் செய்யுங்கள். இதன் மூலம் ஏராளமான பொது மக்கள் பயன்பெறுவார்கள். அவர்களால் புது உலகத்தை பார்க்க முடியும். இதற்கு எப்போதும் தன்னுடைய ஆதரவு உண்டு எனவும், தானும் கண் தானம் செய்யப்போவதாகவும், அதற்கான உரிய நாள் வரும் போது, தாம் அதை அறிவிக்க உள்ளதாகவும் பிரபு தேவா தெரிவித்தார்.
மேலும் இது குறித்து மருத்துவர் ஒருவர் கூறுகையில், இந்தியாவில் வரும் 2020 ஆம் ஆண்டு கண்நோயால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்திற்கும் மேலாக இருக்கும். ஆகையால் அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பிரபுதேவா பெயரில் 100 பேருக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.